
மணிரத்னம் அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) பெரிதும் பேசப்பட்டன.
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மணிரத்னம் 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம் வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா ‘வீனஸ்’ கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும் தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன் இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது. திரைப்படம் பார்ப்பது அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன் என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் வளர்ந்த சிறுவனாக திரைப்படம் பார்க்க துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும் நாகேஷும் இவருக்கு பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் பார்த்து அவர் ரசிகரானார்.
பள்ளிப் படிப்பு முடிந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.
திரைப்பட நடிகை சுஹாசினியை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.
