
சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது.
படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார் விக்னேஷ் சிவன். தன்னுடைய முதல் படமான ‘போடா போடி’யில் தொடங்கி, ‘என்னை அறிந்தால்’, ‘மாரி’, ‘நானும் ரெளடி தான்’, ‘ரெமோ’, ‘விக்ரம் வேதா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘இரும்புத்திரை’ என பல படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். அத்துடன், மியூஸிக் ஆல்பத்துக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
தரண் குமார், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, சாம் சி.எஸ்., சிம்பு, ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். இதில், அனிருத் இசையில் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், ‘போடா போடி’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராகவும் அறிமுகமாகிறார் விக்னேஷ் சிவன். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். காசுக்காக கஞ்சா விற்கும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில்தான் ‘கல்யாண வயசு’ பாடலைப் பாடி பாடலாசிரியராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்
