களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓவியா அறிமுகமாகி விமலுக்கு ஜோடியானார். இவர்களுடன் சரண்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
இந்தப் படம் வெளியாகி 9 வருடங்களாகும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விமல் ஓவியா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகம் காதல் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிகர் விமல் அரசியல்வாதியாக வலம் வர இருக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10-ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.