
சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது ‘சங்கமித்ரா’ படம். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி நாயகர்களாகவும், ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், திடீரென இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்.
சங்கமித்ராவின் முழுமையான ஸ்கிரிப்ட் தனக்கு தரப்படவில்லை என்றும், படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை என்றும், அதனால் தான் சங்கமித்ராவில் இருந்து தான் விலகுவதாகவும் கூறினார்.
ஸ்ருதிஹாசன். இக்குற்றச்சாட்டை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது. இந்நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதிஹாசனை மறைமுகமாக சாடியுள்ளார்.
“‘சங்கமித்ரா’, இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அது சரியான திட்டமிடுதல் இல்லாமல் முடியாது. ’சங்கமித்ரா’ திரைக்கதை முழுமையாக தயாராகவில்லை என சிலர் கூறுவதை கேட்கிறேன்.
கடந்த 2 வருடங்களாக வேலை நடைபெற்று வருகிறது. தொழில்முறையை பின்பற்றாதவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. ’சங்கமித்ரா’ மாதிரியான படத்துக்கு படப்பிடிப்பு வேலை என்பது 30 சதவிதம் தான். 70 சதவீத வேலை படப்பிடிப்புக்கு முன்பே செய்யப்படுகிறது.
தங்கள் குறைகளுக்கு மற்றவர்களை குறை சொல்வது ஏன்?. திராட்சை புளித்துவிட்டதா?. ஒரு கௌரவமான பாரம்பரியத்தை தொடர்பவர்களிடமிருந்து இன்னும் கூட சிறுது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். உங்கள் சொந்தத் தவறுகளை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
