
தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி ‘கிளாக்’ உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.[3] தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். ஆறாம் ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். “பள்ளத்தூர் பாப்பா” என அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.

ஆரம்பத்தில் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது “எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்” சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. மூன்று தலைமுறைகளுடன் நடித்த பெருமை இவரை மட்டுமே சாரும் இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு
