
ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேதரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கடம்பன்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
‘கடம்பன்’ படத்தைத் தொடர்ந்து நடிப்பதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் ஆர்யா. அமீரும் ஆர்யாவை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் ஒதுக்கினார் ஆர்யா.
முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் அமீர். ‘பிச்சைக்காரன்’ பட நாயகியான சாத்னா டைட்டஸிடம் நாயகி வேடத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. படத்தின் தலைப்பாக ‘சந்தனதேவன்’ வைக்கலாம் என்று படக்குழு ஆலோசித்து வருகிறது.
மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக ராம்ஜி ஆகியோர் பணியாற்ற இருக்கிறார்கள். படக்குழு முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.