Friday, May 1
Shadow

காலக்கூத்து – திரைவிமர்சனம் (காலம்)

நடிகர்கள் – பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, ஆர்.என்.ஆர்.மனோகரன், மகேந்திரன், பாண்டி ரவி, ராஜலட்சுமி, தயாரிப்பு – மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட், இயக்கம் – எம்.நாகராஜன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – பி.வி.சங்கர், படத்தொகுப்பு – செல்வா RK, ஸ்டன்ட் – அன்பறிவு

தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு மதுரை படம். பள்ளி மாணவன் ஈஸ்வரன் (பிரசன்னா) தனது தாய், தந்தையை இழந்த சோகத்துடன் ஆறாம் வகுப்பில் வந்து சேர்கிறார். சோகத்துடன் இருக்கும் ஈஸ்வரனை சீண்டுகிறான் சகமாணவனான ஹரி (கலையரசன்). ஆத்திரமடையும் ஈஸ்வரன் ஹரியின் மூக்கை உடைக்க, அவனது அப்பா அம்மா சண்டைக்கு வருகிறார்கள். தாய், தந்தையை இழந்த பிள்ளை என்பதால் ஈஸ்வரன் மீது பரிவு காட்டுகிறார் ஹரியின் தாய். அடுத்த நாளே அவரும் மரணமடைய, தாயை இழந்த ஹரிக்கு ஆறுதல் தருகிறான் ஈஸ்வரன். இருவருக்குமான பகை, வலுவான நட்பாக மாறுகிறது.

சுமார் 20 வருடங்கள் கழித்து, அவர்களின் வாலிபப் பருவத்தில் தொடர்கிறது கதை. எப்போதும் ஜாலியாக இருக்கும் ஹரியும், காயத்திரியும் (சாய் தன்ஷிகா) காதலிக்கிறார்கள். அமைதியே உருவாக இருக்கும் மெக்கானிக் ஈஸ்வரனை, ஒருதலையாக காதலிக்கிறார் ரேவதி (சிருஷ்டி டாங்கே). ரேவதியின் காதலை ஏற்க ஈஸ்வரனை சம்பதிக்க வைக்கிறார் நண்பன் ஹரி. இருவர் வாழ்க்கையும் சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வேலையில், ஹரியின் தங்கையிடம் வம்பிலுக்கும் கவுன்சிலர் மகனை அடித்து நொறுக்குகிறார் ஈஸ்வரன். இதனால் அவரை பழித்தீர்க்க துடிக்கிறது வில்லன் கும்பல். இது ஒருபுறம் இருக்க சிருஷ்டி டாங்கேவின் தந்தைக்கு காதல் விஷயம் தெரிந்துவிடுகிறது. நண்பர்கள் இருவரின் காதலும் வெற்றி பெற்றதா?, பிரசன்னாவை வில்லன் கும்பல் பழி தீர்த்தா? என்பது மீதிக்கதை.

ஒரு பழைய கதையை எளிமையாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நாகராஜன். திரைக்கதையில் புதிது என எதுவும் இல்லை. எல்லா காட்சிகளையும் நீளமாக வைத்திருப்பதால், மெகா சீரியல் பார்ப்பது போன்றே இருக்கிறது. திரைக்கதையின் போக்கும் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் வகையில் இருக்கிறது.

பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி, மகேந்திரன் என படத்தில் வரும் அனைவருக்கும் லேசான மேக்கப் தான் போட்டிருக்கிறார்கள். தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும். ஆனால் கதையும், திரைக்கதையும் வலுவாக இல்லாததால், அவர்களது உழைப்பு எடுபடாமல் போகிறது. வெள்ளக்காரனிடம் தமிழ் பேசச் சொல்லும் காட்சியும், சரக்கடிக்கும் போதும் மகேந்திரன் செய்யும் ரகளைகளும், பள்ளி பருவ நட்பும் தான் படத்தில் ஆறுதலான காட்சிகள்.

இயல்பான ஒளிப்பதிவின் மூலம் மதுரையை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். படம் மித வேகத்தில் பயணிப்பதற்கு எடிட்டர் செல்வாவின் படத்தொகுப்பும் காரணம்.

நட்பு, காதல் என வழக்கமான கதையை எடுத்துவிட்டு, படத்தின் முடிவில் ஒரு மெசேஜ் கார்டு போடுவது இப்போதைய சினிமா டிரென்டாகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. மனித உயிர்களை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிளைமாக்ஸ் மனதில் நிற்க மறுக்கிறது.

மொத்தத்தில் காலக்கூத்து போதாதா காலம் Rank2/5