
சினிமாவில் நடிக்க வந்த யாஷிகா சினிமா மூலம் பிரபலமாகவில்லை ஆனால் அவருக்கு பிக்பாஸ் கைகொடுத்து பிரபலமாகிவிட்டது இப்போது அவருக்கு ஏற்பட்ட மீ டூ பிரச்னையை அவர் பங்குக்கு சொல்லி இருக்கிறார்.
பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை மீடூ ஹேஸ்டேக் மூலம் பதிவு செய்து வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலர் இந்த புகாரில் சிக்கியது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து நடிகைகள் பலர் தங்களது பாலியல் துன்புறுத்தல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தானும் மீடூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும், திரைத்துறையில் மட்டுமல்ல சமூகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “மீடூ சரியான இயக்கம். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அதை நான் ஆதரிக்கிறேன். சினிமாவில் வாய்ப்பு தேடிய போது, தந்தை வயதுள்ள இயக்குநர் ஒருவரால் நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.
பிரபலமான இயக்குநரான அவரது மகன் நடிகர் ஆவார். அவரது படத்தில் நடிக்க வேண்டுமானால், அவருடன் இரவைக் கழிக்க வேண்டும் என அவர் எனது அம்மாவிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.
அவர் உடல்ரீதியாக என்னை துன்புறுத்தாவிட்டாலும், மனரீதியான பாதிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியில் வருவதற்கே எனக்கு நீண்டநாட்கள் ஆனது. உடல் ரீதியாக எனக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்திருந்தால் நிச்சயம் நான் போலீசில் புகார் அளித்திருப்பேன். சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.
யாஷிகாவின் இந்தக் குற்றச்சாட்டு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதோடு, யாஷிகா குறிப்பிட்ட அந்த இயக்குநர் யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
