
பெந்தபாடு புஷ்பவல்லி அல்லது பொதுவாக புஷ்பவல்லி பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர். இவர் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி ஆவார். ஜெமினி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ் மாலினி (1947), சத்தியபாமா (தெலுங்கு) ஆகியவை இவருக்குப் புகழ் தேடித் தந்தன.
ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் பெந்தபாடு என்ற ஊரில் தொண்டாபுரம் ஜமீன் குடும்பத்தில், ஆந்திர வைணவ மரபில் பிறந்தவர் புஷ்பவல்லி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. வி. ரங்காச்சாரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
பிற்காலத்தில் இவர் ஜெமினி கணேசனைத் திருமணம் புரிந்தார். நடிகை ரேகா இவர்களின் மகள் ஆவார்.

1936 ஆம் ஆண்டில் துர்கா சினிடோனின் சம்பூர்ண இராமாயணம் என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவரது திறமையைக் கண்ட இயக்குநர் சி. புல்லையா தனது சல் மோகனரங்கா திரைப்படத்தில் நல்ல சந்தர்ப்பமளித்தார். தொடர்ந்து மோகினி பஸ்மாசுரா, வரவிக்ரயம் ஆகிய படங்களில் நடித்து நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டார். தசாவதாரம், மாலதி மாதவம், தாராசசாங்கம் சூடாமணி, சத்தியபாமா போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்னர் தமிழ்த்திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் தாசி அபரஞ்சி (1944) இவருக்கு நல்ல பெயரைத் தந்தது. தொடர்ந்து, பாதுகா, விந்திய ராணி, மிஸ் மாலினி, சக்ரதாரி, சம்சாரம் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
தாசி அபரஞ்சி ,மிஸ் மாலினி, சக்ரதாரி, சம்சாரம், பெற்ற மனம், சங்கிலித்தேவன், கை கொடுத்த தெய்வம்
