
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ‘மஹா’ படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகின்றன. ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொருவிதமாக சர்ச்சையை உருவாக்கும் அளவில் இருப்பதால், படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி சர்ச்சைக்குரிய போஸ்டர்களை உருவாக்கி படக்குழு வெளியிடுகிறது’ என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், காசி கோவில் பின்னணியில், பெண் துறவி வேடம் அணிந்து ஹன்சிகா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. ‘இது இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது; இளம் பெண்களை சிகரெட் பிடிக்கும் ஆர்வத்துக்கு தூண்டுகிறது’ என சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து ஹன்சிகா மற்றும் ‘மஹா’ பட இயக்குநர் ஜமீல் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான மற்றொரு போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், புர்கா அணிந்து முஸ்லீம் பெண் வேடத்தில் ஹன்சிகா நமாஸ் செய்வது போலவும், பின்னணியில் அவர் கையில் துப்பாக்கியுடன் தற்கொலைப் படையாக மாறுவது போலும் காட்சி இடம்பெற்றிருந்தது.
‘மஹா’ படத்தின் போஸ்டர்கள், அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா போஸ் கொடுக்கிறார்.
‘சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல. கதைக்கு தேவைப்படுகிறது. அதற்கேற்பத்தான் போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன. படத்தை பார்க்கும் போது, எல்லோருக்கும் இது புரியும்’ என, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது #maya #hansika #jamel #poster #bloodbath
