Sunday, April 26
Shadow

ரஜினி மற்றும் கமலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் போர்க்கொடி

ரஜினி, கமல் உட்பட யார் அரசியல் கட்சி தொடங்கினாலும் ஆதரிக்க மாட்டேன்’’என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன். அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன. பண்ணை வீடும் இருக்கிறது. முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன். அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி, கமல், பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கினால் அதை ஆதரிக்க மாட்டேன்.

நானும் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். ஜிஎஸ்டி.க்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் காரணம் அல்ல. இது குறித்து மெர்சல் படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அது தவறாக இருந்தால் பாஜ.வினர் கண்டிப்பாக கேள்வி எழுப்பலாம். அதைவிட்டு சாதி விஷயத்தை முக்கியமாக வைத்துக் கொண்டு சண்டை போடக்கூடாது. ஜிஎஸ்டி சரியில்லை என்று நான் சொன்னால் அதற்காக நான் பிரதமருக்கு எதிராக பேசுவதாக ஏன் நினைக்கிறீர்கள்? தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் கேள்வி கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். இதற்கிடையே தனது பேட்டி குறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், ‘பிரபலமாக இருப்பதாலேயே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றுதான் சொன்னேன். சிலர் அதை திரித்து அரசியலுக்கு நடிகர்களே வரக்கூடாது என நான் சொன்னதாக பரப்புகிறார்கள். அது தவறு’ என்றார்.

Leave a Reply