
விக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.
1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

தற்போது, இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடம் பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.
அரம்பமே அட்டகாசமாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
